பண மழையில் நனையும் வாக்காளர்கள்... தீவிர சோதனையில் தேர்தல் அதிகாரிகள்
நெல்லை, அக்.5-
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அடுத்தடுத்து வரும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று வரை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தங்களது சின்னங்களை மக்கள் மறவாமல் இருக்க பாட்டு பாடியும், நடனம் ஆட செய்தும், குரல் பதிவு செய்தும் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு கிராமமும் திருவிழா போல் காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் வித்தியாசமான வாக்குறுதிகளை அளித்தும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க பணப்பட்டுவாடாவும் தொடங்கி படுஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Also Read 👍 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?
குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எப்படியாவது தேர்தலில் ஜெயித்துவிட வேண்டும் என்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு பணத்தை வாரி இறைக்கின்றன. கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் கூட பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற களம் இறங்கி உள்ளனர்.
மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் சில வேட்பாளர்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஒரு ஓட்டுக்கு கொடுத்து வருகின்றனர். தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும், பதவியை பிடித்தாக வேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களது வார்டுகளில் பண மழையை பொழிவதாக கூறப்படுகிறது.
ஒன்றிய கவுன்சிலர்கள் வேட்பாளர்களும், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வழங்கி வருகின்றனர். நகர்புறங்களை ஒட்டி அமைந்துள்ள வார்டுகளிலும், கிராமங்களிலும் இவ்வாறு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதேபோல் கிராமப்புறங்களிலும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் ரூ.500 வரையிலும், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் வழங்குகின்றனர். இதனால் கிராம பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு யூனியனிலும் வாக்காளர்களை பூத் சிலிப்புகளை கொண்டு வரச்சொல்லி வேட்பாளர்களும், கட்சியினரும் பணம் கொடுத்து வருகின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் விவரமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அங்கு வாக்களிக்க தகுதியான நபர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து பணம் கொடுக்கின்றனர்.
இன்னும் சிலரோ, அந்த வீட்டில் இருக்கும் நபர் தனக்கு வாக்களிப்பாரா அல்லது வேறு கட்சிக்கு வாக்களிப்பாரா என்பதை அறிந்து அதற்கேற்ப பணம் வழங்கி வருகிறார்கள். பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்தே பணம் கொடுத்துள்ளதால் அவர்கள் தாராளமாக பணத்தை பட்டுவாடா செய்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே 2 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அடுத்தடுத்து வரும் பணப்பட்டுவாடா புகாரினை அடுத்து அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மானூர் யூனியனில் ரூ.4.70 லட்சத்துடன் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? என்று அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments