நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?
மும்பை:
ஆர்யன் கானின் செல்போனில் இடம்பெற்று உள்ள உரையாடல்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனியாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். 8 பேரிடமும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சட்டப்பிரிவுகள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காவலுக்கு ஆர்யன் கானை அனுப்ப வேண்டியதில்லை என அவரது வக்கீல் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோர்ட், ஆர்யன் கான் உட்பட 8 பேரையும் அக்டோபர் 7ம் தேதி வரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்த இருக்கின்றனர்.
அதன்படி இன்று காலை ஆர்யன் கான் உட்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு 8 பேரும் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. வாக்கு மூலமாகவும் பெறப்பட்டது.
இதற்கிடையே ஆர்யன் கானின் வக்கீல் சதீஷ் கூறுகையில்,
“போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுவது போன்று ஆர்யன் கான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முன்பு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராக இருக்கிறார்” என்று கூறி உள்ளார்.
ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன்கான் மீது சந்தேகத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறுகையில், “ஆர்யன் கானின் செல்போனில் பதிவாகி இருந்த தொடர்புகள் அனைத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணைகளில் தான் இது தொடர்பான தகவல்கள் தெரிய வரும்” என்றனர்.
ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆர்யன் கானின் செல்போனில் இடம்பெற்று உள்ள உரையாடல்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளில் ஒரு குழுவினர் தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த ஆய்வு முடிந்த பிறகுதான் ஆர்யன் கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆர்யன் கானை மீட்க பாலிவுட் திரை உலகின் பல்வேறு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தி திரை உலகின் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஷாருக்கானுடன் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மும்பை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ஆர்யன்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் போதைப்பொருள் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சிறிது அளவு வைத்திருந்தாலே ஓராண்டு ஜெயில் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு போதைப் பொருட்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை கூட தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்யன் கான் விசாரணை தகவல்களை பாலிவுட் திரை உலக பிரமுகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
No comments
Thank you for your comments