Breaking News

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை பெறும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களின் குறைகளை மனுவாகப் பெறும் இடத்தில் இன்று (5-10-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் பொதுமக்கள், ஊழியர்களிடம்  குறைகளை முதலமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.

தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அறையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறையில் இருந்து திடீரென கீழே இறங்கி தரை தளத்தில் இருந்த முதலமைச்சரின் தனி பிரிவுக்கு சென்றார்.

அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் தனிப்பிரிவில் மனு கொடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது ஒருவர் தனது மகன் காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்ததாக தெரிவித்தார்.

புகார் கொடுக்க வந்தவரிடம் உங்களது வீடு எந்த ஏரியாவில் உள்ளது, எப்போது காணாமல் போனார் என்று விசாரித்தார். உடனடியாக அவரது மனுவை சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு அனுப்ப சொல்லி காணாமல் போன நபரை விரைந்து கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தனிப்பிரிவில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் அவர்கள், அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய பதில்களை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார். 

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments