Breaking News

எஸ்சி, எஸ்டி வழக்கில் கைது செய்யாத காவல்துறைக்கு எதிராக அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் |Protest in Arur Against Police Inaction on SC/ST Atrocities Act Case


தருமபுரி மாவட்டம் அரூரில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 15ம் தேதி, அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற கல்லூரி மாணவன் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்கிக் கொண்டு சென்றபோது, அதிவேகமாக வந்த வாகன ஓட்டியிடம் “மெதுவாக செல்லுங்கள்” என கேட்டுள்ளார். இதற்கு கோபமடைந்த ஓட்டுநர், நிவாஸ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து, சாதி பெயரை கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து அறிந்த நிகில் என்ற இளைஞரும் இடத்திற்கு வந்தபோது, பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து இருவரையும் தாக்கியுள்ளனர். 

இதையடுத்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 10 நபர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், குற்றவாளிகளை கைது செய்யாமல் விசாரணை என்ற பெயரில் தாமதப்படுத்துவதாகவும், மாறாக பாதிக்கப்பட்ட நிவாஸ் மற்றும் நிகில் மீது கூட வழக்கு பதிந்துள்ளதாகவும் முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


அரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தவறான வழக்குகள் பதிக்கக் கூடாது” என்று கோஷமிடப்பட்டது.


“தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் வன்கொடுமைகள், ஆணவப் படுகொலைகள் குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

No comments

Thank you for your comments