நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலுக்கும் கோரிக்கை...
அரூர், டிச. 4:
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சார்பில், எல்லப்புடையாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோ.வெங்கடேசன், தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அன்று கோரிக்கை மனு அனுப்பிஉள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி வருவாய் கிராமத்தில், புல்லூருவி மலைப் பகுதியில் இருந்து வரட்டாறு நோக்கி மழைநீர் வருவதற்கான கால்வாய் வசதிகள் இருந்தன.
இந்த கால்வாய்களை அங்குள்ள விவசாயிகள் சிலர் அழித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனர். அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக புல்லூருவி மலையில் பகுதியில் இருந்து தாழ்வான இடங்களை நோக்கி வந்த மழைநீரானது வேளாண் பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்திப்படுத்தியுள்ளது.
இதனால் மஞ்சள், நெல், மரவள்ளிக்கிழங்கு உள்பட ஏராளமான வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
எனவே, கீரைப்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டி வருவாய் கிராமங்களில் புல்லூருவி மலையில் இருந்து வரட்டாறு நோக்கி வரும் நீர்வழித்தடங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments