Breaking News

சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி.. பயனாளிகள் மகிழ்ச்சி...

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. 

மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளுவர் மாவட்டத்தில், நடைபெற்ற விழாவில் 1730 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள்/ நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி, சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும், சுய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்கள்.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 14.12.2021 அன்று 58,463 சுய உதவிக் குழுக்களைக் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85கோடி மதிப்பிலான கடன் உதவிகள் / நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

அதன்படி, கோவை மாவட்டத்தில் 1068 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 12,816 உறுப்பினர்களுக்கு ரூ.41.31 கோடி மதிப்பிலான கடன் உதவிகள்/நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பயனாளி பேட்டி:

கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் வட்டரத்தில், 12  உறுப்பினர்களைக் கொண்டு எங்களுடைய தேன் கூடு மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. 

கொரோனா பேரிடர் காலத்தில் நாங்கள் வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தோம். இதனால் எங்களுடைய குடும்பத்திற்கு தேவையான அன்றாட செலவுகளைகூட எங்களால் சமாளிக்கமுடியமல் கஷ்டப்பட்டு வந்தோம். 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் எங்கள் தேன் கூடு மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.5இலட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. 

இக்கடனுதவியின் மூலம் எங்கள் குழு மூங்கில் கூடை பின்னுதல் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூங்கில் கூடைகளை உள்ளூர் மற்றும் நகரப்பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலின் மூலம் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ரூ.300 முதல் ரூ.900 வரை இலாபம் பெறுகின்றனர். 

இந்த கடனுதவி திட்டத்தின் மூலம் எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் வாழ்வாதரத்தை மீட்டு தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments

Thank you for your comments