Breaking News

தமிழகம் முழுவதும் 4ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை, அக்.3-

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 42 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.  20,000 முகாம்களில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று 4-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முகாம்கள் நடப்பதை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, 22 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி இதுவரை போடவில்லை.

இந்த முகாம்கள் தெருக்களிலும், வீடுகளின் அருகிலேயும் நடத்தப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதியது. வழிப்போக்காக சென்றவர்கள் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு சென்றதை பார்க்க முடிந்தது. 

வீடுகளின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது போல மக்கள் ஆர்வத்துடன் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இது தடுப்பூசி திருவிழாவாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் உத்தரவுப்படி இதுவரை நடத்தப்பட்ட மூன்று கட்ட முகாம்களில், இலக்கையும் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்ட சிறப்பு முகாமில் 20 லட்சம் பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 16 லட்சம் பேருக்கும், 26 லட்சம் பேருக்கு மூன்றாம் கட்ட முகாமிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 இன்று நடைபெறும் நான்காம் கட்ட முகாமில் ஏறக்குறைய 20,000 முகாம்கள் அமைக்கப்பட்டு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் பேர் இருப்பதாக ஒன்றிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது. இவற்றில் 10 லட்சம் பேருக்கு கடந்த முகாமில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 10 லட்சம் நபர்களுக்கு இன்று நடைபெறும் முகாமில் செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கபடுகிறது”எனத் தெரிவித்துள்ளார்.

Also 👍Read 👉 பத்மநாபபுரம் அரண்மனையின் மன்னர் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம்.. அமைச்சர்கள் பங்கேற்பு..

கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 28 நாட்கள் முடிந்து யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு கோவாக்சின் 5 முதல் 6 லட்சம் அளவிற்கு கையிருப்பில் உள்ளது. அவர்கள் முன் வந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதேப்போல் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக்கொண்டு 84 நாட்கள் முடிந்த நிலையில் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வோரும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

ஒன்றிய அரசின் சார்பில் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. தமிழக அரசு மிகச் சிறப்பாக தடுப்பூசி செலுத்தியதால் 36 லட்சம் தடுப்பூசிகள் அளவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த மாதத்திற்கு 1 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 30 லட்சம் அளவுக்கு கூடுதலாகப் பெற்று அக்டோபர் மாதத்திற்கு 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த மாத இறுதிக்குள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுகொள்ளும் நிலையை உருவாக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள குமுளி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார்.

அப்போது குமுளியில் தமிழக அரசின் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கோரிக்கை விடுத்து, தற்காலிகமாக போக்குவரத்து பணிமனையில் செயல்படும் பேருந்து நிலையத்தை பார்வையிட அழைத்துச் சென்றார். அதனை ஏற்று அப்பகுதியையும் அமைச்சார் ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.




No comments

Thank you for your comments