Breaking News

பத்மநாபபுரம் அரண்மனையின் மன்னர் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம்.. அமைச்சர்கள் பங்கேற்பு..

கன்னியாகுமரி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சாமி சிலைகள் தமிழக காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக புறப்பட்டது. கேரளா தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வருடந்தோறும் 9 நாட்கள் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலைகள் திராவிதாங்கூர் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம். 

அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்யபட்டு விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். 

ஆனால் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் கொரோனா காரணமாக பிரமாண்டமான ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் எளிதான முறையில் சாமி சிலைகள் கொண்டு செல்லப்படும் என்றும் கேரள-தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டது . 

அதன்படி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் முருகபெருமான் ஆகிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனை அடைந்தது. அதை தொடர்ந்து இன்று பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நடைபெற்றது. 

இதில் மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் கேரளா தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோர் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் உடைவாள் வழங்கபட்டது.


இந்நிகழ்ச்சியில் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் கோவளம் வின்சென்ட், நெய்யாற்றின் கரை அர்சலன், பாறசாலை ஹரீந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் , தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகியோர் பல்லக்கு வாகனங்களில் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அதைதொடர்ந்து இன்று மாலை குழித்துறை மஹாதேவர் ஆலயத்தில் தங்கும் சாமி சிலைகள் நாளை காலை தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் தமிழக அறநிலையத் துறையிலிருந்து கேரளா தேவசம்போர்டு கையில் ஒப்படைக்கபடுகிறது.

இந்த சாமி சிலைகள் வரும் 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜையில் வைக்கபடுகிறது. வழக்கமாக கேரளா மாநில காவல்துறையினர் வருகை தந்து மரியாதை செலுத்தி சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா நெறிமுறைகள் காரணமாக கேரளா காவல்துறையினர் தமிழக - கேரளா எல்கையான களியக்காவிளையில் வந்து வரவேற்று செல்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனால் முதன்முறையாக கேரளா காவல்துறையினர் இன்றி தமிழக காவல்துறையினர் மட்டும் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதை செலுத்தியது குறிப்பிடதக்கது.

இதேபோல் கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடை தொடர்ந்து பக்தர்கள் வழியெங்கும் பூஜைகள் செய்யவும் தடைவிதிக்கபட்டுள்ளது. நவராத்திரி விழாவிற்கு சாமி சிலைகள் செல்வதையடுத்து வழி நெடுங்கிலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments