Breaking News

திருநங்கைகள் மற்றும் காவல் துறையினருக்கு விழிப்புணர்வு

சென்னை :

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையிலுள்ள திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் பெறவும், நல்வழிபடுத்தவும், அவர்களின் உரிமைகள் பற்றி எடுத்து கூறியும், திருநங்கைகள் மற்றும் காவல் துறையினருக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நல்வழிப்படுத்தவும், காவல் அதிகாரிகள் திருநங்கைகளை கண்ணியமான முறையில் கையாண்டு, உறுதுணையாக செயல்படவும், விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டம் சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ராஜேஷ் கண்ணா மற்றும் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆதிலஷ்மி லோகமூர்த்தி, திருநங்கை சமூக ஆர்வலர் சக்திதேவி, சேத்துப்பட்டில் திருநங்கைகள் காப்பகம் நடத்தி வரும் தோழி அமைப்பின் திட்ட மேலாளர் சவிதா, வேலூர் நீதிமன்ற லோக் அதாலத் உறுப்பினர் கலைமாமணி சுதா, காவல் அதிகாரிகள் மற்றும் சென்னையில் வசிக்கும் சுமார் 60 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

⏰ Also Read 👉 எந்த தேர்தல் வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்றவில்லை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  

இக்கலந்தாய்வில், சென்னை பெருநகரில் வசிக்கும் திருநங்கைகள் பாலியல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நல்வழிபடுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் திகழவும் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் திருநங்கைகளுக்கு அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் அதிகாரிகள், திருநங்கைகளிடம் மரியாதையாகவும், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், சமூகத்தில் அவர்களும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து சாதனைகள் படைத்து வருவதை மனதில் கொண்டு, வழிகாட்டுதல் வேண்டும் எனவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய திருநங்கைகளுக்கு முடிந்த உதவிகள் செய்ய முன்வர வேண்டும் எனவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திருநங்கைகள் கல்வியிலும், அனைத்து துறையிலும் சிறந்து விளங்க அரசும், காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் உதவ முன்வரவேண்டும் என்பதும், திருநங்கைகள் இவற்றை பின்பற்றி வாழ்வில் முன்னேறும்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் (திருநங்கை) பிரித்திகா யாஷினி, பல்வேறு இன்னல்களுக்கும், கேலி பேச்சுகளுக்கும்  இடையே கல்வி பயின்று உதவி ஆய்வாளராக காவல் பணியில் அர்ப்பணிப்புடன்  பணிபுரிந்து வருவதையும், இப்பணியில் கண்ட அனுபவங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில், அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது.

No comments

Thank you for your comments