Breaking News

ஆள் மாறி இழுத்துச் சென்று அடித்த போலீஸ்: கேட்கும் திறனை இழந்த சிறுவன் - ஏட்டு சஸ்பெண்டு

சென்னை, மார்ச் 16-
Cop Suspended for Picking Up the Wrong Boy, Assaulting Himகண்ணகி நகரில் 17 வயது சிறுவனை விசாரணை என்ற பெயரில் ஆள் மாறி இழுத்துச் சென்று போலீசார் அடித்து காயப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், தலைமைக் காவவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஊர்க்காவல் படையைச் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை ‌எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் முகேஷ் , 17. சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், அசந்து தூங்கிக் கொண்டிருந்த முகேஷை வாய், மூக்கு, கன்னம் என கண்மண் தெரியாமல் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய 5 குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வின்சென்ட், நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். நாங்கள் போலீஸ் கூடுதல் கமிஷனர் ஒருவரின் ஸ்பெஷல் பார்ட்டி என்ற கும்பல், வின்சென்டையும் அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி முகேஷை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு சுமோ காரில் போட்டுக் கொண்டு சென்றனர்.

பின்னர் மீண்டும் முகேஷை கண்மூடித்தனமாக தாக்கியனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து நாம் தேடிவந்தது இவன் அல்ல என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

கண்ணகி நகர் அருகில் நடுரோட்டில் முகேஷ் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கை, கால்கள், முகம் வீங்கிய நிலையில் முக்கி முனகியபடி கிடந்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்கள் அந்த முகேசுக்கு தண்ணீர் கொடுத்து மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

தன்னை தூக்கிச் சென்ற போலீசார் தனது கண்ணை கட்டி அழைத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து லத்திக்கம்பால் அரக்கத்தனமாக தாக்கியதாக முகேஷ் வீட்டில் தெரிவித்துள்ளார். இதில் முகேஷின் வாய், கன்னத்தில் பயங்கரமாக காயம் ஏற்பட்டுள்ளது. கழுத்து, கை, கால் எலும்புகள் முறிந்து விட்டன.

ஆபத்தான நிலையில், நடக்க முடியாமல் அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு யார் தாக்கியது என டாக்டர்கள் கேட்கவும், போலீசார் தாக்கியதாக முகேஷ் கூறவும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். எனினும் ராயப்பேட்டை மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை என மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில், மீண்டும் வீட்டில் விடப்பட்ட சிறுவன் கேட்கும் திறனை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் தாக்கியதில் சிறுவனுக்கு இடது காது பகுதியில் ரத்தம் ‌உறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி குழந்தைகள் நல அமைப்பினர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேசிய சிறார் பாதுகாப்பு மையத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் முகேசின் தாயார் சுமதி புகார் செய்தார். அதன்பேரில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கூடுதல் கமிஷனர் (தெற்கு) சங்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து கமிஷனர் உத்தரவிட்டார்.

விசாரணையின் அடிப்படையில் சிறுவனை தாக்கியதாக, தரமணி குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு சரவணன் என்பவரை சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக, தரமணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த செந்தில் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை ‌எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் விசாரணை என்ற பெயரில் சிறுவர்களை துன்புறுத்துவது அதிகரித்துள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரை காவல்நிலையத்தில் சிறுவனின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து விசாரித்ததில் குண்டு தொண்டைக்குள் பாய்ந்தது நினைவிருக்கலாம். இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Thank you for your comments