அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர் நியமனம்? விரைவில் அறிவிப்பு
வாஷிங்டன், மார்ச் 16-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக
கொண்ட சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா
கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப,
நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வருகிறது.
கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெர்ரிக்
கார்லேண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான
போட்டி உள்ளது.
அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63
வயதாகும், மெர்ரிக்காக இருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பூர்வீகமாக
கொண்ட சீனிவாசன், பிறந்தது இந்தியாவாக இருந்தாலும் வளர்ந்தது அமெரிக்காவின்
கன்சாஸ் மாகாணத்தில்தான்.
அமெரிக்காவில் சட்டத்துறை வல்லுநராக உள்ள சீனிவாசன், உச்சநீதிமன்ற
நீதிபதியாக நியமிக்கப்படும்பட்சத்தில், அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டின் முதல்,
ஆசிய-அமெரிக்க (பிரஜை) நீதிபதி என்பதோடு, முதலாவது இந்து நீதிபதி என்ற
பெருமையையும் சீனிவாசன் பெறுவார்.
நீதிபதி தேர்வு பற்றிய அறிவிப்பு இன்றோ, நாளையோ வெளியாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thank you for your comments