Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன்லைனில் வாக்காளர்சேர்ப்பு பணி விரைவில் முடிவடையும்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 16-
தமிழக சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் சேர்க்க வேண்டும், வாக்களிக்க பணம் பெறக் கூடாது என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் பல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அனைத்து வாக்காளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரினை இணைத்துக் கொள்ளும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 150 கலை, அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஆன்லைனில் வாக்காளர் சேர்ப்பு பணி விரைவில் முடிவடையும். மாவட்டத்தில் குறைந்த அளவு வாக்குப்பதிவு ஆகும் வாக்குச்சாவடிகளை கண்டறிந்து வாக்குச்சாவடி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிவிப்பார்கள்.

மேலும் திருவிழாக்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகம் கூடும் இடங்களில் வாக்காளர் விழிப்புணவு டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஹ

மேலும் மாவட்ட செய்தி தகவல் தொடர்பு துறை சார்பில் பெரிய எல்இடி திரை கொண்ட வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னாள் படைவீரர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். 65 வயதுக்குள் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, படை எண். பெயர், முகவரி, தொலைபேசி எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர் ஆகிய விபரங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

விருப்பம் உள்ளவர்கள் உதவி இயக்குனர், காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர், ஜீவா வணிக வளாகம், தாம்பரம் ரெயில் நிலையம் எதிரில், தாம்பரம், சென்னை–45 என்ற முகவரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments

Thank you for your comments