தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: 5 லட்சம் மாணவர்களின் கதி?
சென்னை, மார்ச் 8-
அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற
கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம்
தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக
அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு
அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும்
2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்
என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற
பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி
எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு
வந்தது. விசாரணையின் போது பள்ளிக் கல்வித் துறை சார்பில், 746 பள்ளிகளிலும்
படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே தாற்காலிக
அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்காலிக அங்கீகாரம் மே 31ம் தேதியுடன் முடிவடைவதால்,
அங்கீகாரத்தை நீட்டிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து
கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாவதோடு, இதனால்
அங்கு பயிலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கும்
சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments