Breaking News

டெல்லி, மார்ச் 18-
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டபேரவை தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம்
உறுதியாக உள்ளது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

மாநிலம் முழுக்க பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் பறக்கும் படையினர் சுமார் ரூ.8 கோடி வரை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக பண விநியோகத்தை தடுக்க மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியது: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பது பெரிய சவாலாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் வாகன சோதனையில் ரூ.8 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிரடி சோதனை காரணமாக பணம் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அரசியல் கட்சியினர் மாற்று வழிகளில் பணம் பட்டுவாடா செய்வதில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

எனவே, ஓட்டுப்போடுவதற்கு பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதுகுறித்து பிரசாரம் செய்ய விழிப்புணர்வு குழு அமைக்கப்படும்.

இந்த குழுவில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

வாக்காளர்கள் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டால், இந்த தனிக்குழுவினர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார்கள்.அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர். இந்த அதிரடி திட்டத்தின் மூலம் பணப்பட்டுவாடா நடப்பதை ஓரளவு தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments