Breaking News

குன்றத்தூரில் பயங்கரம்: காதலித்து மணந்த 9-வது மாதத்தில் கொடூரம்! மென்பொறியாளர் மனைவியைக் கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை.

 குன்றத்தூர் | டிசம்பர் 23, 2025

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை பகுதியில், காதலித்துத் திருமணமான ஒன்பதே மாதங்களில் மென்பொறியாளர் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



காதல் திருமணம்: 

மூன்றாம் கட்டளை தளபதி தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் (25). கணினி மென்பொறியாளரான இவர், தன்னுடன் பணிபுரிந்த யுவஸ்ரீ (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

நேரில் கண்ட அதிர்ச்சி: 

செவ்வாய்க்கிழமை யுவஸ்ரீயின் தங்கை அக்கா வீட்டிற்குச் சென்றபோது, வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், குன்றத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, யுவஸ்ரீ படுக்கையிலும், விஜய் தூக்கிலும் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதற்கட்ட விசாரணை: 

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, விஜய் தனது மனைவி யுவஸ்ரீயின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இருவரது உடல்களையும் மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சனை மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments