Breaking News

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மீகம்- காஞ்சி சங்கராசாரியார் ஆசியுரை

காஞ்சிபுரம்,டிச.21:

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மீகம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவத்தின் போது பேசினார்.




காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் வளாகத்தில் உள்ள சித்தீஸ்வரர் மகாலில் அனைத்துலக முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் 3 வது நாளாக திருமுறை திருவிழா நடைபெற்றது.விழாவில் ஏலவார்குழலி அம்பிகைக்கும்,ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் திருமணத்தை ஆகம விதிகளின்படி நடத்தினார். விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு வழங்கிய ஆசியுரை.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மீகம்.கல்வி, தொழில்,நிர்வாகம்,சேவை இவை அனைத்துக்கும் தேவை ஆன்மீக உணர்வு.இந்த உணர்வு இருந்தால் தான் எதையும் சிறப்பாக செய்ய முடியும்.எனவே எங்கும் ஆன்மீகம் நிறைந்திருக்க வேண்டும்.  அதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள். 

தினசரி ஒரு முறையாவது கோயிலுக்கு போக வேண்டும்.இயலவில்லையெனில் வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.கோயிலுக்கு போகும் போது வெறும் கைகளோடு போகாமல் கோயிலுக்கு தேவையான பூவோ, பூஜைப் பொருட்களோ,எண்ணையோ என ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று பக்தியோடு காணிக்கையாக சமர்ப் பிக்க வேண்டும்.

நமது நாட்டில் ஆன்மீக திருப்பணிகள் பலவாறு வளர்ந்து கொண்டிருக்கிறது.காசியில் விசுவநாதர் கோயில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தரிசிக்கும்படி திருப்பணிகள் தொடங்கியுள்ளன.அயோத்தியில் நீதிமன்ற உத்தரவின்படி திருப்பணிகள் நடந்துள்ளன.

அக்கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு காஞ்சிபுரத்திலிருந்து செங்கலும்,5 தங்க நாணயங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.அதைத்தான் பிரதமர் மோடி அன்று அடிக்கல் நாட்டினார்.தொழில்கள் சிறக்க பக்தியும்,பக்தி சிறக்க ஆன்மீகமும் தேவை என்றார்.

திருக்கல்யாண விழாவிற்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள்,துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமண விழாவில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்,எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன்,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்,காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.முருகேஷ், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர்கள் சுந்தர்கணேஷ்,பிரபு,வராஹி சில்க்ஸ் உரிமையாளர் எஸ்கேபி கோபிநாத் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக 108 சிவாச்சாரியார்கள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சியும்,ஓதுவார்களின் திருமுறை பேழை வழிபாடும் நடைபெற்றது.

No comments

Thank you for your comments