Breaking News

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா விளம்பரப் பதாகை - ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்


காஞ்சிபுரம், டிச.15:

காஞ்சிபுரத்தில் வரும் டிச.19 முதல் டிச.29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத்திருவிழாவிற்கான விளம்ரப் பதாகையை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் பெற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் டிச.19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகத்திருவிழாவிற்கான விளம்பரப் பதாகையினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் பெற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகத் திருவிழா தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும்,தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பதிப்புகங்களின் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

விழா தொடர்பான குறும்படம் இளைஞர்களை முழுமையாக கவரும் வகையில் ஏ.ஐ.தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்,1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனைகளை தூண்டும் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் ஆகியன உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

விளம்பரப்பதாக வெளியீட்டு விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments