Breaking News

காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரத்தில் கிராமசபைக் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு


காஞ்சிபுரம், நவ.1:

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மராஜபுரத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியம் கம்மராஜபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ க.சுந்தர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிகழாண்டில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் தொடர்பான பதிவேடு கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சியின் செயலாளர் வாசித்த தீர்மானங்களும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மழைநீர் சேகரிப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,சுகாதார விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் ஆகியன குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்ட நிறைவில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.பின்னர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments