Breaking News

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்- காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்பேச்சு


காஞ்சிபுரம், நவ.17:

அறிவுசார் குறைபாடுடைய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளின் மாணவ,மாணவியர்களது பெற்றோர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் ஆதுரா சிறப்புப் பள்ளியில் அறிவுசார் குறைபாடு மற்றும் புறஉலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து நடத்தவுள்ள தொழிற்பயிற்சி முகாமிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து குத்து விளகேற்றி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவிற்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.திலீப்,இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் உமாபதி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆதுரா பள்ளி தாளாளர் சுபா வரவேற்றார்.

பின்னர் இது குறித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசுகையில்... 

இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களால் 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடைய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முதற்கட்டமாக 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகள் தயாரித்தல் ஆகியன நடத்தப்படும்.

அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.தங்களது குழந்தைகளோடு கூடவே இருந்து அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அவர்களது உலகமே தனி என உணர்ந்து அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பயிற்சியில் மதிய உணவு,காலை,மாலை தேநீர் ஆகியன முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழும்,சுயதொழில் தொடங்க வங்கிக்கடன்களும் வழங்கப்படும் என்றும் பேசினார்.

No comments

Thank you for your comments