காமாட்சி அம்மன் அவதார தினம் - கோயில் ஊழியர்கள் பால்க்குட ஊர்வலம்
காஞ்சிபுரம், நவ.14
ஐப்பசி மாதம் வரும் பூர நட்சத்திரம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார நட்சத்திரமாகும்,ஆண்டு தோறும் வரக்கூடிய இந்நாளில் காமாட்சி அம்மன் கோயில் தேவஸ்தான பணியாளர்கள் சார்பில் பால்க்குடங்கள் எடுத்து வந்து அம்மனை தரிசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் பால்க்குடங்களை எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
சங்கர மடத்தில் நடைபெற்ற பால்க்குட ஊர்வலம் தொடக்க விழாவிற்கு கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமை வகித்து கோயில் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
பால்க்குட ஊர்வலத்தில் கோயில் மணியக்காரர் சூரியநாராயணன்,கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள்,சித்தஞ்சி சிவகாளி பீடத்தைச் சேர்ந்த மோகனானந்த சுவாமிகள் ஆகியோர் உட்பட பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பால்க்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதீகள் வழியாக வந்து ஆலயத்துக்கு வந்து சேர்ந்ததும் மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
அபிஷேகம் நிறைவு பெற்றதும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் உள்ள பூர மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னர் உற்சவர் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் ஆலயத்தின் சுற்றுப்பிர காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments