Breaking News

வேலூர் மாநகராட்சி மௌனம் – அனுமதியின்றி இயங்கும் வணிக கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை?

 வேலூர்:

வேலூர் மாநகராட்சிக்குள் பல வணிக நிறுவனங்கள் மாநகராட்சி கட்டிட அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட புகார்களுக்குப் பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலம், கொணவட்டம் பகுதியில் உள்ள எம்.எஹ். ஸ்டீல் டிரேடிங் கம்பெனி, நியூ ராயல் டைல்ஸ், மற்றும் அல் & சஃபா ஸ்டீல்ஸ் ஆகிய வணிக நிறுவனங்கள் மாநகராட்சி கட்டிட அனுமதியின்றி பல ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடக்கிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் வேலூர் மாநகராட்சி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து,  மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 18.08.2025 அன்று மனு அளிக்கப்பட்டிருந்தது.  

இதனையடுத்து வேலூர் உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சிக்கு எழுத்துமூலமாக “உடனடி அமலாக்க நடவடிக்கை எடுக்க” அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது.  

இந்நிலையிலும்,  இதுவரை எந்தவித நடவடிக்கையும் வேலூர் மாநகராட்சி  எடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி மீது மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

“மக்கள் குறை தீர்வு நாள் என பெயரளவில் நடத்தப்படுகிறது; ஆனால் மக்கள் தரும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி உதாசீனமாக நடக்கிறது,” என்று சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.


நியூ ராயல் டைல்ஸ் – அனுமதியின்றி கட்டிடம்?

கொணவட்டம் பகுதியில் உள்ள நியூ ராயல் டைல்ஸ் கட்டிடம் மாநகராட்சி அனுமதியின்றி இயங்கி வருவதாக RTI தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், வேலூர் மாநகராட்சி கடந்த மே மாதம் பெயரளவில் நோட்டீஸ் அனுப்பியது. அதற்குப் பின் எந்தவித தொடர்ச்சி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் கூறுவதாவது – “மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது” என்பதாகும்.


அல் & சஃபா ஸ்டீல்ஸ் – வரி ஏய்ப்பு வெளிச்சம்

அதே மண்டலத்தில் இயங்கும் அல் & சஃபா ஸ்டீல்ஸ் கட்டிடம் சுமார் 60 X 120 = 7200 சதுரடி பரப்பளவில் உள்ளது.
இதற்கான சொத்துவரி 2015 முதல் விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய வரி கணக்கில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.

அரையாண்டுக்கு சதுரடிக்கு ரூ.18.33 என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ.1,31,976 வசூலிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது ரூ.22,020 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.


அரசியலா? பணமா? – மாநகராட்சி நிசப்தம்

மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் கூறுவதாவது:

“மாநகராட்சியின் சில அதிகாரிகள் அதிகாரப் பொறுப்பை மறந்து அரசியல் மற்றும் நிதி அழுத்தத்திற்குள் செயல்படுகின்றனர். அதனால் தான் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மௌனம் காக்கின்றனர்.”

இத்தகைய அனுமதியற்ற வணிக கட்டிடங்கள் தன்னிச்சையாக இயங்குவதால், வரி விதிப்பில் கடுமையான தவறுகள் ஏற்பட்டு, அதன் பாரம் பொதுமக்களிடம் வீட்டு வரி உயர்வாக மாறி வருகிறது.


பொதுமக்களின் கோரிக்கை

மாநகராட்சி

  • அனைத்து வணிகக் கட்டிடங்களின் அனுமதி விவரங்கள்,

  • வரி மதிப்பீட்டு கணக்குகள்,

  • RTI வழியாக வெளிவந்த தகவல்கள்
    இவைகளை பொதுமக்கள் பார்வைக்கு திறந்த வெளியில் வெளியிட வேண்டும்.

மேலும் குடியிருப்பு அனுமதியில் வணிகம் செய்யும் கட்டிடங்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தீர்மானம்

புகார் அளித்தும், RTI மூலம் உண்மைகள் வெளிச்சமிட்டும், மக்கள் குறை தீர்வு நாளில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத வேலூர் மாநகராட்சி —

மக்களின் நம்பிக்கையை ஏமாற்றும் நிர்வாகமாக மாறிவிட்டதா?
என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

No comments

Thank you for your comments