கோயில் நகைகள் 1074 கிலோ தங்கத்தை உருக்கி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேச்சு
காஞ்சிபுரம், அக்.12:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்தில் கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பல மாற்று பொன் இனங்கள் 53.380 கிராம் தங்கத்தை உருக்கி அவற்றை முதலீடாக ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு தங்கத்தை ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் செந்தில்நாதனிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இது குறித்து மேலும் கூறியது..
கோயில்களில் இறைவனுக்கு பயன்படாத தங்க நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலையில் உருக்கிய பின்னர் அதனை ஸ்டேட் வங்கியில் முதலீடாக வைக்கப்பட்டு வருகிறது.
தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட போது எதிர்ப்புகள் அதிகமாக இருந்தது.எண்ணிலடங்காத அவமானங்களும் ஏற்பட்டன. ஆனால் இந்த திட்டம் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி வெற்றித் திட்டமாக மாறியிருக்கிறது.
இதுவரை 1074 கிலோ தங்கம் உருக்கப்பட்டு ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17 கோடி வருமானம் வருகிறது. இதை அந்தந்த கோயில் வளர்ச்சிக்காக செலவிடப்படுகிறது.
மேலும் 18 கோயில் தங்கங்களை 308 கிலோவாக உருக்கி தங்க உருக்கு ஆலைக்கு அனுப்ப இருக்கிறோம்.
தற்போது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்,திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களின் தங்கம் மொத்தம் 53 கிலோ 380 கிராம் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது என்று பேசினார்.
விழாவிற்கு கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி,எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகா லட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இணை ஆணையர் சி.குமரதுரை வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் ஆதிசங்கரர் மற்றும் காமாட்சி அம்மனின் சிறப்புகளை விளக்கி பேசினார்.
கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் அமைச்சர்களுக்கு காமாட்சி அம்மன் உருவப்படம் மற்றும் பிரசாதங்களையும் வழங்கினார். நிறைவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைச்சாமி ராஜூ,நகை சரிபார்ப்புக்குழு இணை ஆணையர் ரா.வான்மதி, வழக்குரைஞர் சுவாமி நாதன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
  
No comments
Thank you for your comments