Breaking News

அண்ணாமலை-டிடிவி கூட்டணி: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே சாத்தியம் – முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அரசு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிரான திண்ணை பிரச்சாரக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம் மற்றும் வைகைச் செல்வன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, பூத் கமிட்டி நிர்வாகிகள் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கான விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

டிடிவி தினகரன் – அண்ணாமலை சந்திப்பு குறித்து

செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், டிடிவி தினகரன் – அண்ணாமலை சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

“எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணிக்கு வரலாம். தினகரன் அவரை ஏற்கவில்லை என்றால், அவர் வெளியேறுவார். அதனால் பழனிசாமியை ஏற்றுக்கொள்வோர் அதிமுக கூட்டணியில் சேர்வார்கள்”

என்று கூறினார்.

ஓபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு, “இது மிகவும் சென்சிட்டிவான விஷயம்; இதற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவெடுப்பார்” என்றும் குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

“200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சித்த வைகைச் செல்வன்,

“உதயநிதி ஸ்டாலின் கனவு காண்கிறார். திமுக அரசாங்கம் தூக்கத்தில் இருக்கிறது. தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மக்கள் திமுகவிற்கு பலத்த அடியை கொடுக்கப் போகிறார்கள்”

என்று தெரிவித்தார்.


விஜய் அரசியலுக்கு எதிர்ப்பு

நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்த அவர்,

  • விஜய் ஒரு “இன்குபேட்டர் குழந்தை” போல அரசியலில் வளர்ச்சியடையாதவர்

  • அவரது பிரசாரங்கள் திட்டமிடப்படாதவை, அரைகுறையாக உள்ளன

  • மக்கள் வெறும் கூட்டமாக மட்டுமே திரளுகிறார்கள், அது வாக்குகளாக மாறாது

என்று கூறினார்.

“நயன்தாராவுக்காக 60,000 பேர் ஓடினர், வடிவேலுக்காக கூட கூட்டம் திரண்டது. ஆனால் மக்கள் யார் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள். கொள்கை, சித்தாந்தம் கொண்டவர்களுக்கே மக்கள் வாய்ப்பு தருவார்கள்”

என்று எடுத்துக்காட்டுகளுடன் விமர்சித்தார்.



கமல்ஹாசனை குறித்த விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை திமுக கொச்சைப்படுத்தியுள்ளதாகவும்,

“கமல் திமுகவிடம் அடிமைச் சாசனம் எழுதிவிட்டார். தங்களை நம்பி வந்தவர்களுக்கு இப்படி நடக்கும் என்றால், கூட்டணி கட்சிகள் யோசிக்க வேண்டும்”

என்று வைகைச் செல்வன் எச்சரித்தார்.

No comments

Thank you for your comments