காஞ்சிபுரம் அருகே சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம்,செப்.26:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் ச.நீலமேகன் மற்றும் மு.அன்பழகன் ஆகிய இருவரும் கள ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.அப்போது மாரியம்மன் கோயில் அருகில் சதிகல் சிற்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியது.
ஏதேனும் ஒரு போரில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரனுக்கு அவனது நினைவாக நடப்படுவது நடுகல் எனப்படும்.இந்த நடுகல்லில் இறந்த வீரனின் உருவம் மட்டும் இடம் பெற்றிருக்கும்.இறந்த வீரனின் மனைவி அவனது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனது சிதையில் இறங்கி இறக்கும் நிலையில் அவனது நினைவாக நடப்படுவது சதிகல் எனப்படும்.ஆனால் இச்சதிகல்லில் இறந்த வீரனின் உருவமும்,உடன் அவர் இறந்த மனைவியின் உருவமும் இடம் பெற்றிருக்கிறது.சிறிது மழுங்கிய நிலையில் உள்ள இச்சிற்பத்தின் உயரமும்,அகலமும் 48 செ.மீ.ஆக உள்ளது.
தலையில் கிரீடம் அணிந்த வீரர் சமபங்க நிலையில் நின்றிருக்க அவரது வலது கை போர்வாள் ஒன்றினை தரையில் ஊன்றிய நிலையிலும்,இடுப்பில் குறுவாள் ஒன்றும் காணப்படுகிறது.இடதுகை இடையிலிருந்து மேல்பகுதி வழியாக வரும் ஆடையினை தாங்கியவாறு உள்ளது.பட்டா உடுத்தியுள்ள இவரது உடலில் பல்வேறு இடங்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன.இவர் அரசர் அல்லது சிற்றரசர் மற்றும் தலைவராக இருக்கலாம் எனக் கருத முடிகிறது.இவரது இடதுபுறத்தில் திரிபங்க நிலையில் நின்றிருக்கும் அவரது மனைவியின் வலது கை மலர் ஏந்தியுள்ளது.
No comments
Thank you for your comments