Breaking News

மங்கலம்பேட்டை ஸ்ரீ பேட்டை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 

விருத்தாச்சலம் :

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டைத் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேட்டை மாரியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.



தொடக்க நிகழ்ச்சிகள்

நேற்று (சனிக்கிழமை) மாலை மங்கள இசையுடன், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிர்ஷங்கிரகணம், பிரவேசபலி, கும்ப அலங்காரத்துடன் முதல் கால பூஜை நடைபெற்றது. பின்னர் மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை சிறப்பாக நடத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற கும்பாபிஷேகம்

இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தலைமையில், அருள்மிகு ஸ்ரீ பேட்டை மாரியம்மன் மற்றும் உப தெய்வங்களான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


பக்தர்கள் பங்கேற்பு

இந்த கும்பாபிஷேக விழாவில் மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் செய்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மண்டல பூஜை

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டைத் தெரு, தெற்கு தெரு, ஜெ.ஜெ. நகர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.






No comments

Thank you for your comments