Breaking News

காதல் கணவர் இரண்டாவது திருமணம் – 3 பவுன் நகை, ரூ.1 லட்சம் ஏமாற்றியதாக பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காதல், ஏமாற்றம், இரண்டாவது திருமணம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 காஞ்சிபுரம் நாகலத்துமேடு பகுதியைச் சேர்ந்த தேவிகா (29), தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். செய்தியாளர்களிடம் சந்தித்து விட்டு மனு கொடுக்க சென்றபோது,  மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஆனால், கார்த்திக் முறையாக குடும்பத்தை கவனிக்காமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு, தேவிகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த வையாவூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும், சரத்குமார் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பேசியதன் விளைவாக, இருவரும் காதலில் விழுந்து ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். தேவிகா கர்ப்பமடைந்தபோது, கருவைக் கலைக்குமாறு சரத்குமார் வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டுகிறார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தன்னுடன் பேசிக்கொண்டிருந்த சரத்குமார், திங்கட்கிழமை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து சரத்குமாரிடம் கேட்டபோது, அவரது குடும்பத்தினர் தேவிகாவை ஆபாசமாகத் திட்டி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, தேவிகா காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது, சரத்குமாரை நம்பி ₹1 லட்சம் கடன் வாங்கியும், 3 பவுன் நகைகளையும் கொடுத்ததாகவும், சரத்குமாருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தட்டிக்கேட்டால், சரத்குமாரின் குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தான் இழந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் தேவிகா கோரிக்கை வைத்தார். 

பேட்டி அளித்த பிறகு காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றபோது, அலுவலக வாசலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments