Breaking News

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவர்கள் – காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 காஞ்சிபுரம், செப். 9:

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால், திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மொத்தம் 4997 பயனாளிகளுக்கு ரூ.254 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மகளிர் இலவச பேருந்து திட்டம்

உதயநிதி ஸ்டாலின் தனது உரையில், திமுக அரசு ஆட்சியில் வந்ததும் முதலில் கையெழுத்திட்ட திட்டம் மகளிர் இலவச பேருந்து பயணமாகும் எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 770 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 44 கோடி பயணம் நடந்துள்ளது.

காலை உணவுத் திட்டம் – பிற மாநிலங்களும் பாராட்டு

முதல்வர் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் மூலம் தினசரி 24 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தைப் பாராட்டி, பஞ்சாப் முதல்வர் தமது மாநிலத்திலும் இதை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

2023 செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மட்டும் 1,73,000 பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். விடுபட்டவர்களுக்கும் விரைவில் நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலீடு மற்றும் வளர்ச்சி

முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.15,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதம் என உயர்ந்து உள்ளது. “எங்களைப் போன்றவர்களுக்கு முதல்வர் தான் விளம்பரத் தூதுவர். ஆனால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவர்கள். 2026-இல் மீண்டும் திமுக அரசு தான் ஆட்சி அமையும்” என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

விழாவில் கலந்து கொண்டோர்

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், சாரா ஆட்சியர் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

No comments

Thank you for your comments