Breaking News

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின விழா: ரூ.43 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம், ஆக.15:

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பார்வையிட்டதுடன் ரூ.43 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகத்துடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸôரின் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். 

காவல்துறை, ஊர்க்காவல்படையினரும் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினர்.சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.பின்னர் விழாவிற்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1.3 லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும், வருவாய்த்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.7.78 லட்சம் மதிப்பில் வீட்டு மனைப் பட்டாக்கள்,வேளாண் வணிகத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.4.05 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண்மை இயந்திரங்கள் வழங்கியது உட்பட மொத்தம் 38 பயனாளிகளுக்கு ஆட்சியர் ரூ.43.13 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 432 பேருக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

அரசுப்பள்ளி மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி,சார் ஆட்சியர்கள் ஆஷிக்அலி(காஞ்சிபுரம்)மிருணாளினி (ஸ்ரீபெரும்புதூர்) மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், அரசுப்பணியாளர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments