ஆக.31,காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
காஞ்சிபுரம், ஆக.28:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு,வேதாச்சலம் நகர், பிள்ளையார்பாளையம் உட்பட 20 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் வரும் 31 ஆம் தேதி 35வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரியகாஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.
அதன் பின்னர் அச்சிலைகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கடலில் விஜர்சனம் செய்யப்படவுள்ளது.
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் இளைஞர் அணி நிர்வாகிகள் சார்பில் 11வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் முக்கிய வீதிகளில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.விநாயகர் ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அருகே வையாவூர் சாலையில் கோனேரிக்குப்பம் ஊராட்சி மூவேந்தர் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. மூலவர் கற்பக விநாயகர் மாலையில் தியானலிங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

No comments
Thank you for your comments