Breaking News

100 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு ஆட்சியரின் பாராட்டு மற்றும் பரிசுகள்

காஞ்சிபுரம், ஜூலை 14:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் 100 சதவிகித மதிப்பெண் பெற்ற இரு மாணவியருக்கு, மாவட்ட ஆட்சியர் திருமதி கலைச்செல்வி மோகன், திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுப்பொருட்களும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) க.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 440 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்து உடனடியாக தீர்வு காணுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

கூட்ட நிறைவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயிலும் மாணவியர்களான ஜெ.மேகலா மற்றும் வி.ஹேமமாலினி ஆகிய இருவருக்கும் ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் ஆகியனவற்றையும் வழங்கி பாராட்டினார்.

இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் பென்சிங் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய நேஷனல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் உட்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments