Breaking News

தாயையும் குழந்தையையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு – கணவருக்கும் மாமியாருக்கும் 13 ஆண்டு சிறைத் தண்டனை...காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம், ஜூலை 16:

தாய் மற்றும் குழந்தை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட கணவரும் அவரது தாயாரும் தலா 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்றைய நாளில் (புதன்கிழமை) தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.


காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் பகுதி மேட்டுக்குப்பம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் மகள் மகேஸ்வரி(26) இவருக்கும் விஜயன் என்பவருக்கும் கடந்த 15.11.2013 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்திஷ்(9) என்ற மகனும் இருந்துள்ளார்.

தாய் மகேஸ்வரியும், மகன் நித்திஷூம் கிணற்றில் குதித்து கடந்த 14.5.2015 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரியின் தந்தை புருஷோத்தமன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அப்புகாரில் வரதட்சணை கொடுமை காரணமாகத் தான் எனது மகள் மகேஸ்வரியும், பேரன் நித்திஷூம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணயும் நடந்து வந்தது. 

இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் சசிரேகா ஆஜரானார்.

நீதிமன்ற தீர்ப்பு:

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கணவர் விஜயனுக்கும், அவரது தாயார் லட்சுமியும் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தியதோடு இருவருக்கும் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments