Breaking News

பாமகவின் குழப்பத்திற்கு திமுகவே காரணம் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

 காஞ்சிபுரம், ஜூன் 16:





பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுக தான் என்று காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பாமகவின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ சக்தி. கமலம்மாள், மாநில பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் வ.உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தா.ஹரி கிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது..உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மாமல்லபுரத்தில் மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டினோம். இது திமுகவுக்கு ஆச்சரியமாக இருந்தது.எனவே நம்மை வளரவிடக்கூடாது என முடிவு செய்து திமுக தற்போது பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாமக வளர்ந்து விடக்கூடாது என்பதில் திமுக மிகுந்த கவனம் செலுத்துகிறது. பாமகவின் தற்போதைய குழப்பத்துக்கு காரணமே திமுக தான். நமது முதல் எதிரி திமுக என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது. பாமகவில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத் தான் பாமகவில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். 

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பலமுறை இட ஒதுக்கீடு கேட்டும் திமுக நமக்கு தராமல் துரோகம் செய்து விட்டது.இட ஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்லியே 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது.எனவே வரும் தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். என் கட்சிகோ, சமூகத்துக்கோ நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் அது தான் என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும். நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படியிருந்தும் மன்னிப்பு கேட்கிறேன்.

வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை திமுக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் நடை பயணத்தை தொடங்குகிறேன். நடைப்பயணத்தின் போது திமுகவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவேன். 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை மக்கள் விரும்பவில்லை.அதனால் புதிய விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தான் அமைக்க வேண்டும்.அங்கு விமான நிலையம் அமைக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. 

பரந்தூரில் அமைத்தால் விளைநிலங்கள், ஏரிகள் அனைத்தும் பாழாகி விடும். இருந்தும் திமுக பரந்தூரில் தான் விமான நிலையத்தை அமைக்க விரும்புகிறது.இதற்கு காரணம் திமுகவினர் பரந்தூரை ஒட்டி பல இடங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள். கூடுதல் விலைக்கு இடங்களை விற்கலாம் என்பதால் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தீவிரம் காட்டுகிறது திமுக.

வரும் 8 மாதங்களில் திமுக ஆட்சி அகன்று விடும்.  மீண்டும் ஆட்சிக்கு வராது. அதனால் மக்கள் கவலைப்படவேண்டாம் என்றும் அவர் பேசினார்.

காஞ்சிபுரத்தில் மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உட்பட மாவட்ட வளர்ச்சி குறித்த 9 தீர்மானங்களும் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

No comments

Thank you for your comments