கொள்முதல் நெல் மூட்டைகளுக்கான பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்..
காஞ்சிபுரம், ஜூன் 10-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் விவசாயிகள் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் ,
ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை 90 நாட்களுக்கும் மேலாகியும் விவசாயிகளுக்கான பணம் வழங்கபடவில்லை.
இது குறித்து விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,என பல இடங்களில் அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டரிடமும் விற்பனை செய்த நெல்லுக்கான பணத்தை வழங்க கோரி மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .
அவ்வப்போது அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஒரு சில நாட்களில் பணத்தை பெற்று தருவதாக உறுதியளித்தனர் அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அதிகாரிகள் கூறிய படி நெல்லுக்கான பணம் வழங்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சமாதானம் செய்த போலீசாரிடமும்,கொள்முதல் அலுவலரிடம் விவசாயிகள் ஆவேசமாக பேசிய நிலையில் காஞ்சிபுரம் தாசில்தார் விவசாயிகளுடன் சமாதானமாக பேசி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகளை அழைத்துச் செல்வதாக கூறியதை அடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டரை சந்திக்க அலுவலகத்திற்கு சென்றனர்.
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
No comments
Thank you for your comments