Breaking News

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் – பள்ளி மாணவர்களின் அபாய பயணம் வீடியோ வைரல்!

வாலாஜாபாத், காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாகசமாகவும், உயிர் அபாயத்தை உண்டாக்கும் விதமாகவும் பயணம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதால் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அயல்கிராமமான ஆனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பேருந்தில் தினசரி பயணம் செய்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர், வாலாஜாபாதில் இருந்து பழையசீவரம் வழியாக ஆனம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில், சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியே சாலையின் ஓரமாக கால்களை தேய்த்து பயணித்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.



பயணத்தின் போது பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உள்ளே வருமாறு கேட்டும் மாணவர்கள் மதிக்கவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிகழ்வு, அவர்கள் தங்கள் உயிரையே பறிக்கக் கூடிய ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளும் செயல் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோவை பலரும் பகிர்ந்து, "மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்" என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வை அடுத்து, பள்ளி நிர்வாகம், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments