Breaking News

கிளார் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை

 காஞ்சிபுரம், ஏப்.28:

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள பழமையான அகத்தீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு அக்கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் எனும் பழமையான சிவாலயம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் நித்ய பூஜை,பிரதோஷ வழிபாடு,அகத்தியர் ஆயில்ய பூஜை,பௌர்ணமி பூஜை உட்பட பல பூஜைகள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக இக்கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இருந்த பாதைகளை காணவில்லை.

ஆலயத்துக்கென பட்டாவும்,வருவாய்த்துறை ஆவணங்களும் இருந்தும் பக்தர்கள் சுவாமியை வழிபட பாதை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வயல்வெளிகளில் நடந்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் வசித்து வரும் பரிமளம் என்பவர் கோயிலுக்கு பக்தர்கள் வரும் வழியை மறித்து அவருக்கு சொந்தமான இடம் எனக்கூறி பக்தர்கள் யாரையும் வரவிடாமல் தடுத்து வருகிறார்.

எனவே ஆட்சியர் அவர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக வந்து செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கிளார் கிராம பொதுமக்கள், குழந்தைகள் உட்பட பலரும் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம் என்பவர் தலைமையில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஆட்சியரும் இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

No comments

Thank you for your comments