Breaking News

கோட்டையை முற்றுகையிட சென்ற மாற்றுத்திறனாளிகள் - காஞ்சிபுரத்தில் அடாவடியாக கைது

காஞ்சிபுரம், ஏப்.22 -

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு  செய்திருந்தனர்.





இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் காஞ்சிபுரம் ரயில் நிலையம்,  உத்தரமேரூர் பேருந்து நிலையம், குன்றத்தூர்-படப்பை ஆகிய இடங்களில் இருந்து சென்ற மாற்று திறனாளிகளை செவ்வாய்க்கிழமை அன்று(ஏப்.22) போலீசார் வழிமறித்து அராஜகமான முறையில் 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர்.

இதனால், போலீசாருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், ஆவேசமடைந்த மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். 

அதனை தொடர்ந்து அவர்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில்  வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில்,

தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு, தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற எங்களின் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு,  நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்  என்று காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments

Thank you for your comments