மணிமேகலை விருது பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு
காஞ்சிபுரம்,பிப்.17:
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியர்(பயிற்சி) ந.மிருணாளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 568 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை உரிய அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments