பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக சிபிஎம் அறிவிப்பு

காஞ்சிபுரம், பிப்.23:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிடாவிட்டால் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டக் குழு ஆகியன இணைந்து காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் நில உரிமை பாதுகாப்பு மாநாடு நடத்தினார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கே.நேரு தலைமை வகித்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்,பூவுலகம் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் ஆகியோர் உட்பட பரந்தூர் வட்டார விவசாயிகள்,பொதுமக்கள் பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது,விவசாயிகளுக்கு ஆதரவாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்காமல் மாற்று ஏற்பாட்டினை அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டிற்குப் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருமான பி.சண்முகம் கூறியது.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே நீர்நிலைகளைப் பற்றி ஆராய மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது.இந்தக்குழுவின் அறிக்கையை ஏன் அரசு மறைக்கிறது. 

அப்படியானால் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான அறிக்கையை அந்த நிபுணர் குழு சமர்ப்பித்திருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. அறிக்கையை வெளியிடாமல் மறைப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக அந்த அறிக்கையை வெளியிட வேண்டும்.அதை தெரிந்து கொள்வது மக்களின் உரிமையுமாகும்.

}விமான நிலையம் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை அரசு தீவிரம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்தும் வலியுறுத்துவோம். 

அதையும் மீறி தமிழக அரசு செயல்பட்டால் மக்களை ஒன்று திரட்டி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் போது தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி எங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம் எனவும் பி.சண்முகம் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments