Breaking News

நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்- காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம், பிப்.1:

காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் பகுதியில் நெகிழிகழிவுகள் சேகரிப்பு முகாமை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார்.


தமிழகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும்,உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி மாதத்தில் ஒரு நாள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் பகுதியில் மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாமை தொடங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பை ஆகியனவற்றை வழங்கினார். பொதுமக்களுடன் இணைந்து நெகிழிப்பைகள் சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்,

பொதுமக்களும், வியாபாரிகளும் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கிய எறியக்கூடிய நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

நெகிழிப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துக்கள், தீமைகள் ஆகியன குறித்து தெரிந்து கொண்டாலே நாம் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம். நெகிழிப்பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டார்.

நெகிழிப்பைகள் சேகரிப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஆட்சியர்(பயிற்சி) ந.மிருணாளினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வே.நவேந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் வீ.முத்துராஜ், வீ.ரங்கசாமி ஆகியோர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்கள்,தன்னார்வலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments