Breaking News

4 மாவட்டங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது-ரூ.24 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரம், பிப்.22:

காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்கள்,கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியன தொடர்ந்து திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன.

இதனையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையும் நடைபெற்று வந்தது. 

தனிப்படையினர் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் சாலைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கம்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வில் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதி மிலிட்டரி சாலையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனையிட்டனர். 

சந்தேகப்படும்படியான தகவல்களை அவர்கள் தந்ததை தொடர்ந்து மேல் விசாரணையில் அவர்களில் இருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(33)சுரேஷ்(25)மற்றும் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தை சேர்ந்த பரிபாய்தீன்(30) என்பதும் தெரிய வந்தது. 

3 பேரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தையும் காவல்துறை கண்டு பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள்,வைர மோதிரம் 1, வெள்ளி நகைகள் 340 கிராம்,கார்கள் 3, ஆட்டோக்கள் 2, இருசக்கர வாகனங்கள் 2, மடிக்கணினி 1, கைபேசிகள் 2 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

இவை தவிர அவர்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்றும் வீடுகளில் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரு இரும்பு ராடுகள் ஆகியனவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த பொருட்களின் மதிப்பு ரூ.24 லட்சம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments

Thank you for your comments