காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஒரே நாளில் 389 பேருக்கு பணி நியமன ஆணை
காஞ்சிபுரம், பிப்.22:
காஞ்சிபுரம் ராணி அண்ணாத்துரை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ்.சீனிவாசன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் 137 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது மனித வளத்தேவைக்காக நேர்காணலை நடத்தினார்கள். இம்முகாமில் 3083 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 389 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இரண்டாவது நேர்காணலுக்காக 436 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் குடிநீர் வசதி,கழிப்பறை வசதி மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியனவற்றுக்கும் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரு பள்ளிகளிலும் மெகா விளம்பர பதாகை வைக்கப்பட்டு அவற்றில் எந்தெந்த நிறுவனங்கள் என்ன பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளார்கள் என்றும் சம்பள விபரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கும் விழா ராணி அண்ணாத்துரை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இர.தேவேந்திரன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர்கள் மாணிக்கவாசகம், ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் கி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.முகாமில் தேர்வு செய்யப்பட்ட 389 பேருக்கு காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவக பணியாளர்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments