Breaking News

24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - பொதுக்கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வழங்கினார்.

காஞ்சிபுரம், பிப்.21:

காஞ்சிபுரத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினரின் ஆய்வுக்குப் பின்னர் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.10 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை குழுவின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெள்ளிக்கிழமை வழங்கினார்.


தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் அக்ரி எஸ்எஸ் கிரு,ஷ்ணமூர்த்தி, எஸ்.சந்திரன், ப.சிவக்குமார், ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாங்காடு நகராட்சியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடம், குன்றத்தூர் வட்டம் சிங்கராயபுரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி, சாலமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகள் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.10 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், வீல் சேர், மற்றும் செயற்கை கால்கள் ஆகியனவற்றையும் கு.செல்வப் பெருந்தகை வழங்கினார்.

ஆய்வின் போதும், ஆய்வுக் கூட்டத்தின் போதும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேசன், உதவி ஆட்சியர் ஆஷிக் அலி, பயிற்சி ஆட்சியர் ந.மிருணாளினி, துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments