Breaking News

மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

காஞ்சிபுரம், டிச.3:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மருதம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மருதம் கிராமத்தில் அரசின் சார்பில் தொழிற்பேட்டை அமைக்க 750 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. 

மருதம் கிராமத்தில் சிப்காட் அமைந்தால் கருவேப்பம் பூண்டி, திருப்புலிவனம், புலிவாய், மருதம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 3000 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் பாழாகி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

ஏரி, குளம், கிணறு மற்றும் கால்வாய்களை அழிந்து நீர்ஆதாரம் பாதிக்கப்படும்.எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்து ஆட்சியர் அலுவலகம் அருகே ஒன்று கூடினார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.சங்க மாவட்ட தலைவர் என்.சாரங்கன்,மாவட்ட செயலாளர் கே.நேரு,சங்க நிர்வாகிகள் டி.ரமணதாஸ்,இ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்றனர்.

கூட்டமாக சென்று மனு அளிக்க அனுமதி இல்லை என விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து 10 பேர் மட்டும் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

No comments

Thank you for your comments