Breaking News

அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம் - 6 முறை ஏன் ? விளக்கம்


கோவை: 

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து இன்று (டிச.27) காலை போராட்டம் நடத்தினார். கோவை,காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் இன்று காலை 10 மணியளவில் தொண்டர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 

“இன்று நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

6 முறை சாட்டையடி ஏன்?

எதற்காக 6 முறை சாட்டையடி என்று நீங்கள் கேட்கலாம். முருகப் பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம். 

நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்பது நம்பிக்கை. நான் அந்த மரபையே பின்பற்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ நாங்களே கூட ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதற்குக் கூட இது தண்டனையாக இருக்கட்டும்.

நான் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தேன். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தேன். 

என் மகளைத் திருப்பித் தருவீர்களா?

அப்போது அந்தச் சிறுமியின் தாய் என்னிடம் “குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், என் மகளைத் திருப்பித் தருவீர்களா?” எனக் கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை அரசியலில் பயணிக்க வைத்தது. 

அரசியல்வாதியாக என்னால் இருக்க முடியவில்லை

எல்லோரையும் போல் ஒரு பிரச்சினை வரும்போது அதைப்பற்றி பேசிவிட்டு பின்னர் மறந்துவிட்டு அதன் பின்னர் அடுத்த பிரச்சினையைப் பேசும் அரசியல்வாதியாக என்னால் இருக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது.

காவல்துறையில் எஃப்ஐஆர் கசிவது என்பதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்கிறேன். எஃப்ஐஆர் பிரதி ஒரு நகல் நீதிமன்றத்துக்கும், ஒரு நகல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுக்கப்படும். 

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன

இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையை யாரோ வேண்டுமென்றே பதிவிறக்கம் செய்து பரப்பியிருக்க வேண்டும். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறை சொல்வதுபோல் அந்தப் பெண் காவல்துறை நடவடிக்கையில் திருப்தியாக இருக்க முடியாது. அந்தக் கயவன் முதல் குற்றத்துக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இன்னொரு சம்பவம் நடந்திருக்காது.

நாங்கள் தவறுகளைக் கண்டித்து அரசியல் செய்கிறோம்

அதனால், நான் நன்றாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை காலணியை அணியப் போவதில்லை.இந்த ஆட்சி தவறு செய்கிறது. அறவழியில் போராடக் கூட அனுமதியில்லை. எல்லாவற்றையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். நாங்கள் தவறுகளைக் கண்டித்து அரசியல் செய்கிறோம்.

தேர்தல் வெற்றி-தோல்வி  பெரிய பொருட்டல்ல

அரசியலில் தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் பெரிய பொருட்டல்ல. 2026 தேர்தலில் தோற்றாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன். நான் சாராயம் விற்ற காசிலும், கமிஷன் காசிலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மாறாக விவசாயத்தில் வந்த காசை வைத்து நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டேன்.

என் அரசியல் பார்வை மாற்றம் 

லண்டன் சென்று திரும்பியபின் என் அரசியல் பார்வை மாற்றம் பெற்றுள்ளது. மற்றபடி என்னைப் பற்றி சமுகவலைதளங்களில் விமர்சிப்பவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார்.

வெற்றிவேல், வீரவேல் கோஷம்

முன்னதாக, அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட போது பாஜக தொண்டர்கள் வெற்றிவேல், வீரவேல் என்றும், வேண்டாம், வேண்டாம் சாட்டையடி வேண்டாம் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல்:

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அண்ணாமலை, “நம் நாட்டுக்கு புதிய பொருளாதார கொள்கையை வகுத்துத் தந்தவர் மன்மோகன் சிங். அவரது மறைவுக்காக பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் நாட்டுக்கு வகுத்தத் தந்த பொருளாதாரக் கொள்கைகளை அன்புடன் நினைவுகூர்வோம், நன்றி சொல்வோம்” என்றார். மேலும், மன்மோகன் சிங் மறைவை ஒட்டி இன்று நடைபெறவிருந்த பாஜக போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றார்.

இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

“மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டவும், அடுத்த தலைமுறை சீரழிந்து போவதை தடுத்து பாதுகாத்து, குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க, தன்னை வருத்திக்கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழக மக்களிடையே இன்று விழிப்புணர்வு போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு

திமுக அரசால் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்கள் ஏமாற்றப்படுவதையும், கடந்த சட்டமன்ற தேர்தல் அளிக்கப்பட்ட பொய் வாக்குறுதிகளை மறந்து, தமிழக மக்களை வஞ்சித்ததால், கொலை கொள்ளை, போதை, ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாட்டையடி போராட்டம் அமைந்துள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட போட மாட்டேன் என்று அவர் எடுத்த முடிவு தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மக்கள் விரோத திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்

மேலும் தமிழகத்தின் இருண்டகால திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பாஜக சார்பாக மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு அமைதிப் புரட்சியை உண்டாக்கி வருகிறது. 

மேலும் தமிழகத்தின் நலம் காக்க 48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை முருகனிடம் முறையிட உள்ள அண்ணாமலையின் கோரிக்கை கந்த சஷ்டி கவச நாயகன் முருகன் அருளால் நிறைவேறும். மக்கள் விரோத திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments