Breaking News

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்

சென்னை: 

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரியை நவ.29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


தமிழ் சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது திரைப்படங்களில் நடிக்காத நிலையில், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசி வருகிறார். 

சர்ச்சை பேச்சு

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு  இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். 

கண்டனம்

அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

புகார்கள்

இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கஸ்தூரி பேட்டி அளித்தார். அதேநேரத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்தடுத்து 6 புகார்கள் அளிக்கப்பட்டன.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 

தலைமறைவு

இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்குவதற்கு போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வந்தன. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார்.

கைது

 இதன் தொடர்ச்சியாக,  தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

எப்படி கைது செய்யப்பட்டார்

அதாவது, சினிமா தயாரிப்பாளர் ஹரி என்பவர் உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கஸ்தூரி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே தலைமறைவாக இருந்த கஸ்தூரியை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் சென்றபோது, கதவை நீண்ட நேரம் திறக்காமல் உள்ளே மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

“ஐதராபாத் காவல்துறையினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுவோம்” என தனிப்படையினர் கூறிய பின்னர் கஸ்தூரி கதவை திறந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர். 

மேலும், ஐதராபாத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கஸ்தூரி பதுங்கி இருந்து தயாரிப்பாளரின் செல்போன் எண்ணை பயன்படுத்தி மற்ற நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், செல்போன் எண்ணை வைத்து கஸ்தூரியை கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடல் தகுதி  பரிசோதனை

இந்நிலையில், சாலை மார்க்கமாக கஸ்தூரியை சென்னைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் தகுதி சான்றிதழ் பெறப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்

அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி ராஜா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை கஸ்தூரி நீதிபதியிடம், “நான் சிங்கிள் மதர். எனக்கு ஸ்பெஷல் சைல்ட் உள்ளார். அவரை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை சொந்த ஜாமீனில் விட வேண்டும்” என நீதிபதி முன்பு நடிகை கஸ்தூரி வேண்டுகோள் வைத்தார்.

நவ.29  வரை நீதிமன்றக் காவல் 

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரியை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை அடுத்து, நடிகை கஸ்தூரியை புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். 

அரசியல் நாடகம்

அப்போது நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை வாகனத்தில் ஏற வந்த நடிகை கஸ்தூரி, “Political drama.. எதிர்பார்த்தது தான்.. நீதி வெல்லட்டும்” என கோஷம் எழுப்பினார்.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழங்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments