காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழிசை சௌந்தர்ராஜன் தரிசனம்
காஞ்சிபுரம், அக்.8:
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா நிகழ் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் 6 வது நாளையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எழுந்தருளினார்.சிறப்பு தீபாராதனைகளும் அதனையடுத்து சூரனை காமாட்சி அம்பிகை வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மூலவர் காமாட்சியையும்,பின்னர் நவராத்திரி மண்டபத்தில் காட்சியளித்த உற்சவர் காமாட்சி அம்பிகையையும் தரிசனம் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வையும் பார்வையிட்டார். தமிழிசை சௌந்தர்ராஜனுடன் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, மாவட்ட பொதுச் செயலாளர் ருத்ரகுமார்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்,காஞ்சி மாநகர மேற்கு மண்டல தலைவர் காஞ்சி.ஜீவானந்தம் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
சுவாமி தரிசனத்திற்கு முன்னதாக காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லூரி வளாகத்தில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன் நடைபெற்ற திருவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டார்.
Post Comment
No comments
Thank you for your comments