Breaking News

காஞ்சிபுரம் அருகே 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் தோண்டி எடுப்பு

காஞ்சிபுரம், அக்.17:

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தீப்பாஞ்சி அம்மன் ஆலயத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.பழமையான இக்கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் மு.அன்பழகன் கூறியதாவது

சதிக்கல் என்பது போரில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரனின் மனைவி அவனது இறப்பைத் தாங்க முடியாமல் கணவனின் சிதையில் பாய்ந்து இறந்து போகும் நிலையில் அவளின் நினைவாக நடப்படும் கல்.இந்நினைவுக் கல்லில் கணவன் மற்றும் மனைவி என இருவரின் சிற்பமும் இடம் பெறும்.இது பற்றிய தகவல்கள் தொல்காப்பியம் முதற்கொண்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இக்கோயிலின் தரைத்தளம் முழுவதும் சிமெண்ட்டால் சமன் செய்யப் பட்டிருக்கும் நிலையில் இச்சிற்பத் தொகுதியானது 22 செ.மீ.உயரம் மட்டும் வெளியில் தெரியும்படி இருந்தது.அதனை உரியவர்களின் அனுமதியுடன் தோண்டி எடுத்து ஆய்வு செய்தோம்.

இச்சிற்பம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் வழிபாட்டிலும் இருந்து வந்திருக்கிறது. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவுமில்லாத இச்சதிக்கல் சிற்பம் 74 செ.மீ உயரம் மற்றும் 38 செ.மீ.அகலமும் கொண்டுள்ளது.

இச்சிற்பத் தொகுதியில் 42 செ.மீட்டரில் ஒரு வீரனும்,37 செ.மீட்டர் உயரத்தில் அவன் மனைவியும் புடைப்புச் சிற்பமாக உள்ளனர். வீரனின் இடதுகை அம்பு ஒன்றை உயர்த்திப்பிடித்திருக்க அவனது வலதுகை வில்லின் நாணை இழுத்துப்பிடித்துள்ளது. இரண்டு சிற்பங்களின் பாதங்களும் இடது பக்கம் திருப்பிய நிலையில் உள்ளன. வீரனின் தலையில் உள்ள கொண்டை மேல்நோக்கியும் பெண்ணின் கொண்டை வலது பக்கமாகவும் உள்ளது. இச்சிற்பத்தொகுதி மிகஅதிகமாக மழுங்கி இருப்பதால் அணிகலன்கள் மற்றும் ஆடைகள் பற்றியும் தெளிவாக அறியமுடியவில்லை. 

வீரனின் வலதுகையினை அவனது மனைவி தன் இடக்கரம்கொண்டு பிடித்திருக்கின்றாள். மனைவியின் வலதுகை அவளது அடிவயிற்றுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பெண்ணின் வயிறு கர்பமாக இருப்பது போன்று மிகவும் பெருத்துள்ளது. 

இச்சதிக்கல்லில் உள்ள பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது கணவரின் சிதையில் புகுந்து உயிர் நீத்திருக்கலாம் எனவும் இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டாகவும் இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.

No comments

Thank you for your comments