காஞ்சிபுரத்தில் நாட்டுப்புறவியல் கண்காட்சி
காஞ்சிபுரம், ஆக.31:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நாட்டுப்புறவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ளது சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறை 3 வது ஆண்டு மாணவர்கள் சார்பில் நாட்டுப்புறவியல் பாடத் திட்டத்தின் கீழ் செயல்வழி தேர்வுக்கான பணியாக நாட்டுப்புறவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
திருவண்ணாமலை சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் செந்தில்வேலன் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் நாட்டுப்புறத் தெய்வங்கள்,வழிபாட்டு முறைகள், தமிழர்களின் பழக்க வழக்கங்கள்,பாரம்பரிய உணவு வகைகள், பழம்பெரும் விளையாட்டுக்கள், இசைக்கருவிகள், சிற்பக்கலை, பாரம்பரிய வீட்டு விளையாட்டு பொருட்கள் ஆகியன இடம் பெற்றிருந்தது.
கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் கணபதி, தெய்வசிகமாணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments