Breaking News

காஞ்சிபுரத்தில் 3 மூட்டை போதைப்பொருள் பாக்கெட்டுகள், ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக கொண்டு வந்தவர் கைது


காஞ்சிபுரம் :

ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தூசி கிராமத்திற்கு விற்பனைக்காக 3 மூட்டை போதைப்பொருட்களை கொண்டு வந்தவர் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர் அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் அருகே தூசி கிராமம் உடையார் தெருவைச் சேர்ந்த தங்கம் திருப்பதி(53) எனத் தெரிய வந்தது.

இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து போதைப்பொருள் பாக்கெட்டுகள் மொத்தம் 2085 பாக்கெட்டுகளை 3 மூட்டைகளில் வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தவரை மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். 

அவரிடமிருந்த போதைப்பொருட்களையும், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

No comments

Thank you for your comments