Breaking News

செப்.28-திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரம் - உத்தரமேரூர் எம்எல்ஏ தகவல்

காஞ்சிபுரம், செப்.23:

காஞ்சிபுரத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் திங்கள்கிழமை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வரும் செப்.28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள், திமுகவின் தோழமைக்கட்சிகளது எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதனையடுத்து உத்தரமேரூர் எம்எல்ஏவும்,காஞ்சிபுரம் மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் கூறியதாவது:-

பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்காக 250 நீளம் 500 அடி அகலத்தில் 3 பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு பந்தலிலும் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளை அருகிலிருந்து பார்க்கும் வகையில் 10 இடங்களில் அகண்ட திரைகளும்,குடிநீர்,கழிப்பறை வசதி உட்பட அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 30 ஆயிரம் பேர் உட்பட மொத்தம் 50 ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.

அமைச்சர் தா.மோ.அன்பரசனும் அடிக்கடி வந்து பொதுக்கூட்ட மேடை அமைவிடத்தையும்,பார்வையாளர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், முக்கியப் பிரமுகர்கள் வரும் பாதைகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் எம்எல்ஏ க.சுந்தர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments